திங்கள், 13 மார்ச், 2017

பட்சிஇராஜா கருடனின் சிறப்புகள்,கருட மந்திரம்

பட்சிஇராஜா கருடனின் சிறப்புகள்,கருட மந்திரம்,
பெருமாளின் ஆதர்ச நணபன் கருடாழ்வார்
ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்திர ரத்தினத்தில் குறிப்பிட்டுள்ளபடி எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு, கருடன் வாகனம் மட்டுமல்ல கொடி, சகா, ஆசனம், மேல் கட்டி வஸ்திரம்,விசிறி, அடிமை எனப் பலவிதமாகவும் இருப்பவர்
ஸ்ரீ கருட பகவான் ஆடி சுக்லபஞ்சமி நன்னாளில் வேதத்திலும் ஜோதிஷ சாஸ்திரங்களிலும் மிகவும் உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்தத் திருநட்சத்திரத்தில்தான் கருடாம்சமான பெரியாழ்வாரும் அவதரித்தார்.பகவான் ஸ்ரீ நரசிம்மரின் திருநட்சத்திரமும் இந்த சுவாதிதான். ஆழ்வார்கள் ஸ்ரீ கருடனை கொற்றப்புள், தெய்வப்புள், காய்சினப்புள், ஓடும்புள் என்று பல விதமாகப் போற்றித் தம் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்..
கருட பஞ்சமியில் திருமணம்
பராங்குசநாயகி ஆகிய நம்மாழ்வார் திருவிருத்தத்தில் எடுத்த எடுப்பிலேயே “புள்ளின் பின் போன தனி நெஞ்சமே” என்று குறிப்பிடுகிறார். பெருமாளுடன் கூடிய ஸ்ரீ கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டுத் துணியை அணிவித்து மல்லி, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை, சம்பக மலர்களால் அர்ச்சனை செய்தல் நலம் பயக்கும்..
கருட பஞ்சமி அன்று மணமான பெண்கள் கருடனைப் பூஜித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆழ்ந்த அறிவு, பொறுமை, வீரம், சமயோசித சாமர்த்தியம் உள்ளவர்களாக விளங்குவார்கள்.
ஸ்ரீ கருடன் எப்பொழுதும் வைகுந்தத்தில் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். ராமபக்த அனுமானைத் திருவடி என்றும் ஸ்ரீ கருடனைப் பெரிய திருவடி என்றும் பக்தர்கள் பெருமையாகவும் உயர்வாகவும் கொண்டாடுகிறார்கள்.


         பூமிப்பிராட்டியை மீட்ட விஷ்ணு
ஸ்ரீ கருடாழ்வாருக்கு மாலையில் பூஜை செய்வது மிகவும் சிறந்தது. பெண்களும் குங்குமத்தைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். முன்பு மகாபிரளயம் உண்டானபோது பூமிதேவி கடலில் மூழ்க, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, ஹிரண்யாட்சனுடன் சண்டையிட்டு, அவனை வென்று பூமிப்பிராட்டியை மீட்டார். இனி எப்பொழுதும் இந்நிலை ஏற்படாது இருக்க பூமியிலேயே பகவான் தங்க நினைத்து கருடனை அனுப்பி கிரீடா பர்வதத்தைக் கொண்டுவரச் செய்து அதன் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்றாகக் கூறப்படும் கருடாத்திரி என்ற பர்வதமே கருடாசலம் என்னும் மலையாகும். சிங்கவேள் குன்றமாகிய அகோபிலத்திற்கும் கருடாசலம் என்ற திருப்பெயரும் உண்டு.
எல்லா ஆலயங்களிலும் சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) திருவிழா நிகழும்போது விமானத்திற்கு மேலே கருட பகவான் வட்டமிடுவதைப் புனிதமாகக் கருதுவது ஐதீகம்.
சிறகுகளைவிடப் பருத்த உடல், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்குடன் கூடிய ஸ்ரீ கருடன் எடுத்து வந்த அமிர்த கலசத்தில் ஒட்டிக்கொண்டு வந்த தேவலோகப் புல்லே பூவுலகில் விழுந்து விச்வாமித்திரம் என்ற தர்ப்பம் ஆனது. விஷ ஜந்துக்கள் இல்லங்களுக்குள் வராமல் இருக்க கருடக் கிழங்கை வாசலில் கட்டும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஸ்ரீ கருடரின் நிழல் விழும் இடங்களில் பயிர்கள் செழுமையாக விளையும் என்பது நம்பிக்கை.
பறவைகளின் அரசன் கருடன். பக்ஷிராஜன், சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்பிரியன், மங்களாலயன், கலுழன், ஸ்வர்ணன், புள்ளரசு, பெரிய திருவடி எனப் பல பட்டப் பெயர்கள் அவருக்கு உண்டு.
வேதமே உருவானவர் ஸ்ரீ கருடர். அவரது இறக்கைகள் மூன்று வேதங்களையும் குறிப்பன. கருடர் ஒளிமயமானவர். நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர். வைகுந்தத்தில் இவர் பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் விஷ்ணு ஆலயப் புறப்பாடு சமயத்தில் கண்ணாடி சேவை நடைபெறுகிறது.
கருடனைச் சேவித்தால் மனதில் ஜபிக்க வேண்டிய மந்திரம் ‘மங்களானி பவந்து’. கருடனின் குரல் கருட த்வனி, இசை நயமிக்கது. மங்களகரமானது. சாம வேதத்திற்கு ஒப்பானது. இந்த ராக ஆலாபனையைத் திருமாங்கல்ய தாரண சமயத்தில் செய்வது மிகவும் சிறந்தது.

ஆன்மீகதகவல்கள் 0091-8939791843

கருடன் தந்த திருமண்
பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வைர முடியை விரோசனன் என்பவன் திருடி வெள்ளையம் என்ற தீவில் வைத்திருந்தான். கருடன் சென்று அந்த வைரமுடியை மீட்டுவரும்போது அங்கிருந்து தன்மேல் ஒட்டி வந்த மண்ணைத் திருநாராயணபுரத்தில் உதிர்த்தார். அதுதான் இன்று வைணவர்கள் நெற்றியிலும் உடம்பிலும் இட்டுக்கொள்ளும் திருமண் ஆனது
   

   கருடபகவானை வழிபாடு செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை .
கருடபகவனை பெண் வடிவமாக காட்சி அளிக்கும் திருத்தலம்
சென்னை சவுக்கார் பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடேஷ் பெருமாள் திருக்கோவில்

நம் ஆலய வழிபாடு, உற்சவம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள், ஐதீகங்கள் உள்ளன. உற்சவத்தின்போது பல்வேறு விதமான அலங்காரங்களில் பகவான் திருவீதியுலா வருவது வழக்கம், அதில் வாகனங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன் போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். 








உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார். ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும். பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்தார்.

கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன். அதேபோல, கிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன். அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம். விஷ்ணு ஸ்தலங்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய கருடன் அருள்பாலிக்கிறார். 

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். இந்த கல் கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார். அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.




கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
நினைத்த காரியங்கள் நிறைவேற கருட காயத்ரி மந்திரம்
மகாவிஷ்ணுவின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர் கருடன். பறவைகளுக்கு தலைவனாக விளங்குபவர் இவர். கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார். சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள்.

இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு. எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் பேரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன். இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும், கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன்.

அவரது வீரச் செயல்களைக் கண்ட மகாவிஷ்ணு, கருடனை தன்னுடைய முதன்மை வாகனமாக ஏற்றுக்கொண்டார். மகாவிஷ்ணு, மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி கருடனிடம் கூறிய விவரங்களே ‘கருட புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால், நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது. அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன், சர்ப்பங்களை உணவாகக் கொள்பவர். எனவே இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.



தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

கருட காயத்ரி மந்திரம்

‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

ஆன்மீகதகவல்கள் 0091-8939791843

பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.

இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கருடனை வழிபடுபவர்களுக்கு, விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும்.


கருட மாலா மந்திரம்

கருட மாலா மந்திரம்

ஓம்  நமோ பகவதே  கருடாய  காலாக்னி  வர்ணாய
ஏஹ்யேஹி  கால  நல  லோல  ஜிக்வாய
பாதய  பாதய  மோஹய  மோஹய  வித்ராவய  வித்ராவய
ப்ரம  ப்ரம  ப்ரமய  ப்ரமய  ஹந  ஹந
தஹ  தஹ  பத  பத  ஹூம்பட்  ஸ்வாஹா


ஆன்மீகதகவல்கள் 0091-8939791843


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக